Рет қаралды 86
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோருக்கு தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் நெல்லையில் தெரிவித்துள்ளார் .
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் கடன் வழங்கம் நிகழ்வு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜாண்மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் , சிறுபான்மை அமைப்பின் கல்வி நிறுவனங்கள் , சிறுபான்மையினரின் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு ஆணைய தலைவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மேலும் சிறுபான்மையினரின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார் . இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை ஆணைய தலைவர் ஜாண்மகேந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார் .
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 2019-2020-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மையினர் வாழ்வாதார நலனிற்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் 01-04-2019 முதல் 31-03-2020 வரை 160 பயனாளிகளுக்கு கடன் தொகையாக 1 கோடியே 84 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 180 நபர்களுக்கு 83 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் டாம்கோ கழகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் . மேலும் அவர் கூறுகையில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக பார்க்காமல் தங்கள் வீட்டில் நடந்த நிகழ்வாக அனைவரும் பார்த்து முழு ஆதரவை தந்துள்ளனர். இந்த விவகாரத்தில் அனைவரின் ஒத்துழைப்பையும் நினைத்து , தான் பெருமை படுவதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அது குறித்து விரிவான அறிக்கை அளிக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அறிக்கை கிடைத்தவுடன் அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்