Рет қаралды 102
மெய்யன்பன் ஒருவனுக்காகத் தெய்வமே வீரனாக வந்து நின்றதும் சேனை வெள்ளத்தைக் காட்டியதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் . சுந்தரசாமந்தனுக்கும் பாண்டியன் குண பூடணனுக்கும் நெருங்கிய உறவு மேலும் வளர்ந்தது. பொய்யை மெய்யாகக் காட்டிய இறைவன் திருவிளையாடல் அதனை நினைத்து இறைவன் பெருமையைப் பேசி மகிழ்ந்தனர்.
திருவிளையாடல் புராணம் பாடல். 1664
பாவம் என வடிவு எடுத்த படிற்று அமணர் பழித்து அழல் செய்
தேவ வரு மறப்பசுவை ஏறு உயர்த்தோன் விடை நந்திக்
காவலனை விடுத்து அழித்த கதை உரைத்தும் அட்டாலைச்
சேவகன் மெய்க் காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம்.
பொருள்.
பாவம் என முடிவு எடுத்த படிற்று அமணர் -
பாவமே என்னும்படி வடிவந்தாங்கிய வஞ்சனையையுடைய
சமணர்கள், பழித்தழல் செய்து ஏவவரும் - பழி வேள்வி செய்து
(தோற்றுவித்து) ஏவ வந்த, மறப்பசுவை - கொலைத் தொழிலை
யுடைய பசுவினை, ஏறு உயர்த்தோன் - இடபக் கொடியுயர்த்திய
சோமசுந்தரக் கடவுள், விடை நந்திக் காவலனை விடுத்து அழித்த
கதை உரைத்தும் - இடபவுருவினையுடைய திரு நந்தியாகிய
காவலனை ஏவி வதைத்தருளிய திருவிளையாடலைக் கூறினோம்;
அட்டாலைச் சேவகன் - (இனி) அட்டாலைச் சேவகனாகிய
அவ்விறைவன், மெய்க்காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம் -
மெய்க் காட்டிட்டு விளையாடின திருவிளையாடலைக் கூறுவோம்.