Рет қаралды 43,511
மீண்டும் "பொங்கும்பூம்புனல்!
**********************************
எனது சிறுபராயப் பாடசாலைக் காலம், அந்தக் காலத்தில் நேரத்தை காட்டுவதற்கு எங்கள் வீட்டில் கைக் கடிகாரமோ, அல்லது சுவர்க் கடிகாரமோ இருக்கவில்லை.ஆனால் பெரிய உருவத்திலான ஒரு வானொலிப் பெட்டி இருந்தது. அந்த வானொலிப் பெட்டி தான் எங்களுக்கு நேரத்தை அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருந்தது.
நாங்கள் அதிகாலையில் நித்திரை விட்டு எழும் முன்னரே எங்கள் தந்தை, நேரத்துடன் வானொலியை முடுக்கிவிடுவார்.வானொலி தனது வேலையை செய்து கொண்டே இருக்கும் வானொலியைக் கேட்டுக்கொண்டே எல்லா வேலைகளும் வீட்டில் நடக்கும்.
காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பள்ளிக்கூடம் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கும் வேளையில் எமது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை இரண்டிலே" பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சிக்கான குறியிசை ஒலிபரப்பாகும் .
மறுகணமே அடுக்களையில் இருந்து எங்கள் தாயாரின் குரல் ஒலிக்கும்" ஏழு மணி ஆயிற்று சீக்கிரம் சீக்கிரம் பள்ளிக்கூடம் போக ரெடி ஆகுங்க " .மறுகணமே மின்சாரம் பாய்ந்தது போல், அந்த பொங்கும்பூம்புனல் ஆரம்ப இசை ஒலியைக் கேட்டு நாங்களும் சுறுசுறுப்பாகி விடுவோம். அப்போது நேரம் சரியாக காலை 7 மணியாகி இருக்கும் .
அந்தக் காலத்தில் அந்த நாட்களில் இலங்கை நாட்டிலே எந்தத் தனியார் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இருக்கவில்லை .இருந்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி மட்டும்தான். எனவே இந்த வானொலிதான் எங்களுக்கெல்லாம் அன்று பெரும் பொழுதுபோக்குச் சாதனமாகவும் ,எங்களைப் போன்றவர்களுக்கு நேரம் கூறும் ஒரு கருவியாகவும், அவ்வப்போது ஒலிக்கும் தனது நிகழ்ச்சியின் குறியிசைகள் மூலம் எமக்கு உணர்வூட்டும் பேருதவியாளனாகவும்திகழ்ந்தது.
அந்த அளவு தினசரி பாடசாலைக்குப் போகும் மாணவர்கள் உட்பட வேலைக்குப் போவார்கள் கூட இந்த பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி மூலம் அதிகாலையில் தங்கள் வேலைகளை துரிதப்படுத்தி செவ்வனே செய்து முடித்தார்கள்.
எனது பாடசாலை பருவம் தொடர முன்னமே இந்த பெறுமதிவாய்ந்த பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை செவிமடுத்து வந்தவன் நான். இப்படியாகப் பயன் மிகக் கொண்ட இந்நிகழ்ச்சியைப் பலதசாப்தங்களாகச் செவியேற்று அனுகூலமடைந்த நான் மட்டுமல்ல நமது இலங்கை நேயர்கள், இந்திய நேயர்கள் நமது இளைஞர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சி அண்மைக்காலத்தில் நிறுத்தப்பட்டதால் மிகவும் வேதனை அடைந்தோம் .
ஆனால் இன்று அந்த நிகழ்ச்சிக்கு ஒரு விடிவு பிறந்ததை இட்டு நாம் அக மகிழ்வடைகின்றோம் .26/07/2021 திங்களாகிய இன்று இலங்கை வானொலி நேயர்கள் ஆகிய எங்களுக்கு இன்று ஓர் திருநாள். ஆம் இன்று எங்கள் அபிமான "பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு விட்டது .இன்று தொடக்கம் மீண்டும் எங்கள் வீடுகளில் காலை 7 மணிக்கு ஒலிக்கும் வேலைக்கு செல்வதற்கான பாடசாலைக்கு செல்வதற்கான "பொங்கும் பூம்புனல்" என்ற "அலாரம்" அடிக்க ஆரம்பித்துவிட்டது.
இன்று காலை சரியாக ஏழு மணிக்கு எமது இலங்கை வானொலி தென்றலில் எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் கே ஜெயகிருஷ்ணா அவர்கள் ஆரம்பித்து வைக்க, எமது மூத்த அறிவிப்பாளர்கள், உலக அறிவிப்பாளர் ஜனாப் பி எச் அப்துல் ஹமீத் அவர்கள், மற்றும் சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு ஆர். சந்திரமோகன் அவர்கள் ,எங்கள் தென்றலின் முன்நாள் தயாரிப்பாளர் திரு.போல் ஜெயசீலன் மற்றும் எமது நமது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள், எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி நாகபூசணி அவர்கள், மேலும் எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் தென்றல் கட்டுப்பாட்டாளர், திருமதி கலிஷ்ரா லூக்கஸ் அவர்கள், இன்னும் எமது அன்பு அறிவிப்பாளர் தயாளினி காயாம்பூ அவர்கள் ,ஒலிபரப்பு உதவியாளரும் தயாரிப்பாளருமான கவ்சல்யா கோவிந்தராஜன் ஆகியோரது பங்கு பற்றுதலோடும், அனைவரதும் மற்றும் நேயர்களதும் வாழ்த்துக்களோடும் நல்ஆசிகளோடும் இன்றைய பொங்கும் பூம்புனல் ஆரம்பம் செய்யப்பட்டது .
இன்று ஆரம்பமான இந்தப் "பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி" என்றும் நிலைத்திருக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கூறி பேரன்புடன் இந்த ஒலிப்பதிவை அன்பர்கள் அனைவருக்கும் வழங்கி விடைபெறுகிறேன் நன்றி!
என்றென்றும் அன்பின் அபிமான நேயர்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எம்.ஐ.உஸனார் ஸலீம்
நிந்தவூர்-இலங்கை(கி.மா)
26/07/2021
"""""""""'"""""''''''"