Рет қаралды 77,770
" 3 செப்டம்பர் "
"கே.எஸ். ராஜா நினைவு நாள் "
எத்தனையோ தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் இருந்தாலும் வானொலி கேட்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. பயணத்தின்போதோ பணிகளின்போதோ வானொலி கேட்பதால் இடைஞ்சல்கள் என்று பெரியதாய் ஒன்றும் ஆவதில்லை.
என்னைப் பொறுத்தவரைக்கும் வனொலியின்மீது இன்றைக்கும் ஒரு தாக்கம் இருப்பதை மறுக்க முடியவில்லை. அதுவும் இரவு நேரத்தில் பாடல்களைக் கேட்பதில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. பகற்பொழுதுகளின் வேலை நெருக்கடியால் வந்த அலுப்பும்., தொழில்சார்ந்த மன உளைச்சல்களும் வானொலி கேட்பதால்தான் மறைகிறது. மனமும் சாந்தமடைகிறது.
எனது சிறு வயதுக் காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டி எங்கும் இல்லை. வானொலியும் ஒரு சில வீடுகளில்தான் இருக்கும்.அந்த வானொலி இருக்கும் வீடுகளில் மாலை நேரத்தில் ஒன்று கூடிவிடுவோம். முக்கியமாக ஒலிச்சித்திரம் அல்லது உடுக்கைப் பாட்டு நிகழ்ச்சிகளின்போது பெரும் கூட்டமே கூடி விடும். அபூர்வமாய் வானொலி இருந்த காலத்தில் நாம் அதை தேடிச்சென்று ரசித்த காரணத்தினால் என் மனதோடு ஒன்றிப் போய்விட்டதோ என்று நினைக்கிறேன். தொலை தூரத்தில் இருந்து ஒலிக்கும் பாடல்களின் ஒலி நம் காதுகளில் ஆனந்த அலைகளாய் பாய்வது உண்டு.
அதைவிட இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் என்றால் இன்னும் என் மனதில் ஒரு துள்ளல் எழுந்துவிடும். அந்த அலைவரிசையும் அந்த நிகழ்ச்சிகளும் இன்றும் என் மனதில் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் உச்சரிப்பும் அந்தத் தமிழும் என்னைக் கட்டிப்போட்டிருந்தது என்றே சொல்லவேண்டும். என் வாழ்வில் எத்தனையோ சம்பவங்களை நான் மறந்திருக்கலாம். ஆனால் இலங்கை வானொலியும் அதன் நிகழ்ச்சிகளும் என் நினைவுகளை விட்டு அகலவே இல்லை. இரவு பத்து மணிக்குமேல் இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். தாயின் தாலாட்டை மிஞ்சிவிடும். அந்த அளவிற்கு மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்