Рет қаралды 2,149
மூன்று பேரை கொன்ற மக்னா காட்டு யானை : கும்கி யானைகள் உதவியுடன் போராடி பிடித்த வனத்துறையினர்
ஒசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையில் மூன்று பேரை கொன்ற மக்னா காட்டு யானையை 8 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் போராடி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அடுத்துள்ள பன்னார் கட்டா தேசிய பூங்காவை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் மக்னா காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்தது. இந்த மக்னா காட்டு யானை அந்த பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை தாக்கி கொன்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதி கிராம பொதுமக்கள் உயிர் கொல்லி மக்னா காட்டு யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த மக்னா காட்டு யானையை பிடிப்பதற்காக கர்நாடகா மாநிலத்தின் துபாரே மற்றும் மத்திகோடு ஆகிய முகாம்களில் இருந்து 8 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள்
கும்கி யானைகளின் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று மக்னா காட்டு யானையை தேடிவந்தனர். தொடர்ந்து வனப்பகுதியில் ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு மக்னா காட்டு யானை எங்குள்ளது என வனத்துறையினர் கண்டுபிடித்து அங்கு கும்கி யானைகளுடன் வனத்துறையினர் சென்றனர். பின்னர் மயக்க மருந்து நிபுணர் ரஞ்சன், மக்னா காட்டு யானை மீது துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினார். தொடர்ந்து ஒரு கி.மீ. துாரம் நடந்து சென்ற மக்னா யானைக்கு மயக்கம் ஏற்பட்டது. தடிமனான கயிறுகளுடன் அதனை கட்டி, பீமா, மகேந்திரா கும்கி யானைகள் உதவியுடன் சிறிது துாரம் மக்னா யானையை வனத்துறையினர் அழைத்து வந்தனர்.
பின்னர் அந்த மக்னா காட்டு யானை லாரியில் ஏற்றப்பட்டு பன்னார் கட்டா தேசிய பூங்காவின் சீகேகட்டே யானைகள் முகாமுக்கு செல்லப்பட்டது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.