Рет қаралды 72,246
பழ இ.எம் கரைசல் தயாரிப்பு முறை
ஒரு பழத்தை அப்படியே சில நாட்கள் வைத்துவிட்டால் பழம் அழுகிவிடுகிறது, காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் பழத்தின் மீது படிந்து வளர்ந்து விடுவதே இதற்குக் காரணமாகும். அதே வழிமுறையில் பழங்களில் நுண்ணுயிர்களை பெருகச்செய்து பழ இ.எம் தயாரிக்கப்படுகிறது. இந்த பழ இ.எம் வளர்ச்சியூக்கியாக மட்டுமல்லாது, பூச்சித் தாக்குதலையும் கட்டுப்படுத்தக்கூடியது.
தேவையான பொருட்கள்:
பப்பாளி - 1 கிலோ, பரங்கிக்காய் - 1 கிலோ (மஞ்சள் பூசணி), வாழைப்பழம் - 1 கிலோ , நாட்டுச் சர்க்கரை - 1 கிலோ, நாட்டுக் கோழி முட்டை - 1
தேவையான உபகரணங்கள்:
5 லிட்டர் பிளாஸ்டிக் வாளி மூடியுடன்
செய்முறை:
பப்பாளி, பரங்கிக்காய் மற்றும் வாழைப்பழம் மூன்றையும் தோலுடன் சின்ன சின்னதாக நறுக்கி பிளாஸ்டிக் வாளியில் போடவும். இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டை ஓட்டையும் தூளாக நுணுக்கிப் போட்டுவிடலாம். நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கலக்கி, கலவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி காற்று புகாதவாறு இறுக்கமாக மூடிவைக்க வேண்டும்.
15 நாட்கள் கழித்து பழக்கரைசலில் வெள்ளை நிறத்தில் ஆடை படிந்திருப்பதைக் காணமுடியும், இது நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்பதைக் காட்டுகிறது. ஆடை படியவில்லை என்றால் ஒரு கைப்பிடி அளவுக்கு நாட்டுச் சர்க்கரையை சேர்த்து மூடிவைக்கவேண்டும். அடுத்த 15 நாட்களில் பழ இ.எம் தயாராகிவிடும், அதாவது பழ இ.எம் முழுமையாக தயாராக 30 நாட்கள் ஆகும்.
கவனிக்க வேண்டியவை:
15 நாட்களில் ஆடை படியவில்லை என்றால் ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும். காற்று புகாதவாறு நிழலில் பாதுகாத்து வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி. பழ இ.எம். கலந்து தெளிக்கவும், பாசன நீரிலும் கலந்து விடலாம்.
பயன்கள்:
பயிர்களுக்கு மிகச்சிறந்த வளர்ச்சி ஊக்கியாக செயல்படும், இலை சுருட்டுப்புழு, மஞ்சள் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும்
பயன்படுத்தும் காலம்
பழ இ.எம் வளச்சியூக்கியை 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.