Рет қаралды 77
#மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா முதல் நாள் திருவிழாவாக காலை 9.55 மணி முதல்10.19 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்றம் மற்றும் வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலுக்குள் குலசேகர மண்டகப்படியில் ஏழுந்தருள்கிறார் இரவு 7 மணியளவில் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி சிம்மவாகனத்திலும் பவனி வருகின்றனர்.
கொடியேற்ற தத்துவம்:
கொடிமரம் என்பது இறைவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும். உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் (மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்) குறிக்கும். மனிதர்களாகிய நாம் கடவுளை அடைவது என்பது எளிதான செயல் அல்ல. ஆனால், நம்மை அவரிடம் கொண்டு சேர்க்க சக்திதேவி உதவுவாள். அவளிடம் போய் நாம் அழுதுவிட்டால் போதும். பிள்ளைகளின் கண்ணீரைத் தாய் பொறுக்கமாட்டாள். அவள் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுவாள்.
ஒரு வீட்டில், பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால், தந்தையிடம் போகமாட்டார்கள். அம்மாவிடம் சொல்லி, அதைக் கேட்டு பெற்றுக் கொள்வார்கள். அதே போன்றது தான் இறைவனை அடையும் நிலையும்! கொடி மேலே ஏறியதும், கம்பத்தோடு ஒட்டிக்கிடக்கும். அதாவது, நாம் இறைவனை கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது இதற்கு பொருள். என்னதான் நாம் இறைவனோடு ஒன்றியிருந்தாலும் அல்லது தியானத்தில் ஆழ்ந்திருந்தாலும், நம் மனம் அலைபாய்வது இயல்பு தான். அப்படி அலைபாயும் மனது எங்காவது சுற்றிவிட்டு, மீண்டும் இறைவனையே வந்து சேரும்.
இதைத்தான் "கொடித் தடை' என்பார்கள். கொடியேறியபிறகு வெளியூருக்குச் சென்றாலும் இரவுக்குள் ஊர் திரும்புவது வழக்கமாக உள்ளது. அதாவது, இறைவனோடு ஒட்டிக்கிடக்கும் உயிர்களின் மனது எங்காவது சுற்றப் போனாலும் கூட மீண்டும் இறைவனையே அடைந்து விடுவதை இது குறிக்கிறது. சிவபெருமானை ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்று சொல்லி வணங்குகிறோம். "சி' என்பது சிவபெருமானையும், "வ' என்பது அம்பாளையும், "ய' என்பது கொடியில் வரையப்பட்ட நந்திதேவரையும், "ந' என்பது கொடிச்சீலையையும், "ம' என்பது தர்ப்பைக்கயிறையும் குறிக்கும். கொடிமரத்தின் அடியில் தர்ப்பைக்கயிறு இருக்கும்.
இந்தக் கயிறை பாசத்துக்கு ஒப்பிடுவார்கள். மனைவி, மக்கள், உறவு, பொருட்கள் ஆகியவற்றின் மீது கொண்ட பாசம் தான் நம்மை இறைவனை அடையவிடாமல் தடுக்கிறது. இந்த பாசப்பிணைப்பில் இருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்பதால் தான் தர்ப்பையை கயிறுபோல் சுருட்டி கீழே வைத்திருப்பார்கள்
கற்பக விருட்ச வாகனம்
இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைப் புரிகிறார். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தைக் குறிப்பதாகும். மரத்திற்கு வேர் ஆதாரமாகவும், அதன் கிளைகள், இலைகள் எல்லாம் மேலே பரவி இருப்பது போல இறைவன் உலகிற்கு ஆதாரமாகவும், அவரைச் சார்ந்து 84 லட்சம் வகை உயிரினங்கள் எங்கும் பரவி இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. கேட்ட வரத்தைக் கொடுப்பதற்காக சுவாமி கற்பக விருட்சத்தில் பவனி வருகிறார்.
சிம்ம வாகனம்.
விரும்பியதை அடைந்து விட்டால், மனதில் அகங்காரம், தற்பெருமை ஆகிய அசுர குணங்கள் உண்டாகி விடும். அதைப் போக்கி நம் மனதை நல்வழியில் திருப்புவதற்காக மீனாட்சி சிம்ம வாகனத்தில் பவனி வருகிறாள். 'எல்லாம் கிடைத்து விட்டது என்று ஆணவம் கொள்ளாதே! கவனமாக இரு!' என்று சிங்கத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை செய்கிறாள். இந்த அரிய தத்துவத்தை உணர்ந்து நாளை இரவு மாசி வீதிகளில் வலம் வரும் அம்மையப்பரை தரிசித்து அருள் பெறுவோம்.
சிவாயநம.
திருசிற்றம்பலம்.
#god
#trending