Рет қаралды 36,974
வீடு, நில பிரச்சனை தோஷங்களை நீக்கும் பூமிநாதர் திருக்கோயில், மண்ணச்சநல்லூர் |Temple for land problem
#sivan
#sivansongs
#shiva
#sivantemple
#omnamahshivaya
#omnamahshivay
#sivanstatustamil
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில், பூமி சம்பந்தமான அனைத்துவிதமான குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
வீடோ, மனையோ, நிலமோ பிரச்னை இல்லாமல் அமைய வீடு கட்டும் யோகம், வீட்டு எண் யோகம், வீடு, மனை, நிலம் விற்கும் யோகம், பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தோஷம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்னை, ஜன்ம சாப - பாப தோஷம், வாஸ்து தோஷம், வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம், பழைய வீடு புதுப்பிக்கும் யோகம், வீடு கண் திருஷ்டி தோஷம் ஆகிய 16-ம் முக்கியம்.
இந்த 16 விதமான தோஷங்களையும் இத்திருக்கோயில் பூமிநாத சுவாமி நீக்குவதாக மாமுனிவர் அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளன.
தோஷங்கள், பிரச்னைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நீக்கி, யோகமான வீடு, மனை, நிலம் அமைய, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலுள்ள அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் லிங்கத் திருமேனியில் பூமிநாத சுவாமி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்
பூமி, வாஸ்து சம்பந்தமான 16 விதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியவராக பூமிநாத சுவாமி திகழ்கிறார். இந்த தோஷங்கள் நீங்க சில வரைமுறைகள் இத்திருக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
மண் வழிபாட்டு முறை
பத்திரதாரர்கள், ரத்த சம்பந்தம் உடையவர்கள் தாங்கள் வாங்க, விற்க விரும்பும் வீடு, நிலம், மனை உள்ள இடத்திலிருந்து வடகிழக்கு ( ஈசானிய, ஜல, சனி) மூலையிலிருந்து மூன்று கைப்பிடி அளவு மண்ணைப் புது மஞ்சள் துணியில் முடிய வேண்டும்.
அந்த மண் முடிப்பை மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு எடுத்து வந்து, ஒரு தேங்காய், 2 வாழைப்பழங்கள், 2 மாலைகள், வெற்றிலைப் பாக்கு தட்சிணையுடன் சுவாமிக்கு அர்ச்சனை செய்து, படைக்க வேண்டும். மண்ணையும் மனதையும் இறைவனிடம் ஒப்படைத்து, வேண்டுதல் நிறைவேறிட பிரார்த்தனை செய்ய வேண்டும்.
திருக்கோயில் குருக்களால் அர்ச்சனை செய்யப்பட்ட பின்னர், பிரகாரத்தை வலம் வந்து கொடுக்கப்பட்ட மண்ணைத் தல விருட்சமான வில்வ மரத்தடியில் குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு இட வேண்டும்.
இரண்டாவது முறையாக பிரகாரத்தை வலம் வந்து, தல விருட்சமான வன்னி மரத்தடியில் குலதெய்வத்தை வணங்கி, தங்கள் வேண்டுதலை மனதுக்குள் கூறி வன்னி மரத்தடியிலுள்ள மண்ணில் ஒரு கைப்பிடியை எடுத்து புது மஞ்சள் துணியில் முடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூன்றாவது முறையாக பிரகாரம் வலம் வர வேண்டும்.
முதல் முறை கோயில் பிரகாரத்தை வலம் வரும் போது பிரம்மா, இரண்டாவது முறை வலம் வரும் போது விஷ்ணு, மூன்றாவது முறை வலம் வரும்போது சிவனின் ஆசீர்வாதம் கிடைப்பதாக ஐதீகம்.
நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து, கம்பத்தடியில் வணங்கி வன்னி மரத்தடியிலிருந்து எடுத்த மண் முடிப்புடன் வீட்டுக்குச் சென்று பூஜை அறையில் வைக்க வேண்டும். இந்த மண் முடிப்பைப் புதன் அல்லது குரு ஓரையில் வீட்டின், மனையின், நிலத்தின் வடகிழக்கு மூலையில் பூமியில் போட்டு, சூடமேற்றி வழிபட வேண்டும். அந்த புது மஞ்சள் துணியில் ரூ. 5 நாணயத்தை வைத்து முடி போட்டு பூஜையறையில் வைக்க வேண்டும்.
தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறியதும், ரூ.5 நாணயம் உள்ள மஞ்சள் துணி முடிப்புடன் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து, முடிப் பையைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். குறைந்தது 3 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்குள் பூமி சம்பந்தமான தோஷங்கள் நீங்கி, தாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது இத்திருக்கோயில் மண் வழிபாட்டு முறை செய்து பலன் பெற்றவர்களின் கூற்றாகவுள்ளது.
மண், மனை, வீடு இல்லாதவர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேற "பூமிக்கே நாதனாக விளங்குபவனே, என்னுடைய பிரார்த்தனையை மனதில் உள்ளதை மாலையாக சாத்திவிட்டேன்'' என்று கூறி, மூன்று அமாவாசை தினங்களிலோ, பிறந்த 3 கிழமைகளிலோ, மூன்று பௌர்ணமிகளிலோ, பிறந்த 3 தேதிகளிலோ வந்து வழிபட வேண்டும்.
தேங்காய், வாழைப்பழங்கள், 2 மாலைகள், வெற்றிலைப் பாக்குடன் மனதிலுள்ள ஆசையை மாலையாகத் தொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து, கோயில் பிரகாரத்தை 16 முறை வலம் வர வேண்டும். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி, அம்மனுக்கு 8 விதமான அபிஷேகங்களை செய்து, வழிபட வேண்டும். மேலும 10 பேருக்கு அன்னதானமும் செய்ய வேண்டும்.
இறைவி அறம் வளர்த்த நாயகி
கோயிலின் மகா மண்டப நுழைவுவாயிலின் வலதுபுறத்தில் தனி சன்னதியில் அறம் வளர்த்த நாயகி என்றழைக்கப்படும் தர்மசம்வர்த்தினி தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். இந்த அன்னையின் முன்பு மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மற்ற திருக்கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் மாறுபட்டிருப்பது தல விருட்சத்தில்தான். இக்கோயிலில் வில்வ, வன்னி மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன.
காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலில் நடை திறந்திருக்கும். நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜை விசேஷமானது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது.