Рет қаралды 730
இந்தியாவின் முதல் எல்லைக்கடல் பாதுகாப்புப் படை குஞ்ஞாலி மரைக்காயர்கள் வரலாறு
இது இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ வலைதளத் தகவல்.
அரபிக் கடலின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட குஞ்ஞாலி மரைக்காயர்
இந்தியாவில் கப்பல் போர்ப்படை அமைத்த முதல் குழுவினர்
யார் இந்த குஞ்ஞாலி மரைக்காயர்கள்? என்ன செய்தனர்?
எங்கு தொடங்கியது?
கி.பி. 1934ஆம் ஆண்டு இந்திய நாட்டுக்கென்று அதிகாரப்பூர்வ கடற்படை அமைக்கப்பட்டது. ஆனால், வரலாறு நெடுக நாடுகளுக்கிடையிலான கடல் வாணிபமும் கொள்ளையர்களுக்கு எதிரான போரும் நடந்துகொண்டே இருந்தன.
இதில், குறிப்பாக மௌரியப் பேரரசும் மகதப் பேரரசும் கவனிக்கப்பட வேண்டியவை. கி.மு. 500 முதல் 200 வரை ஆட்சி செய்த நந்த,மௌரிய வம்சத்தினர் பல்வேறு நாடுகளுடன் நெருங்கிய வர்த்தக உறவைக் கொண்டிருந்தனர். ஆனால், பாதுகாப்புக்காகவும் போர்ப்படைப் பிரிவாகவும் கடலில் ஓர் அமைப்பு தேவை என்ற நிலை போர்ச்சுகீசியர்கள் வருகைக்குப் பிறகு கட்டாயமானது.
இந்துஸ்தான் என்ற வளமிக்க தேசத்துக்கு செல்லும் வழியை கண்டறிந்த வாஸ்கோட காமா வந்திறங்கிய கோழிக்கோடுதான் அந்தத் தேவை வலுவாக வடிவம் பெறத் தொடங்கிய இடம்.
அரபிக் கடல் மீது கண் வைத்த வாஸ்கோ ட காமா
ஐரோப்பியர்கள் கோழிக்கோடு, கொச்சி, கோவா, சூரத் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்தனர். அத்துடன், அரபிக்கடலின் முக்கியத் துறைமுகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் அரபிக்கடலின் பெரும் வர்த்தகத் தலைமையாக ஐரோப்பியர்கள் விளங்கலாம் என்பது காமாவின் திட்டம்.
இதற்காக கோழிக்கோடு பகுதியை ஆண்ட சமுத்ரி வகையறா மன்னரிடம் தொழில்முறை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மெல்ல மெல்லத் தொழில் வளரும்போது தங்கள் காலனிகளை நிறுவத் தொடங்கிய போர்ச்சுகீசியர்களுடன், சமுத்ரி அரசு முரண்பட்டு சண்டை தொடங்கியது. இந்தச் சண்டைகளில் சமுத்ரி அரசுக்கு பேருதவி செய்த, இஸ்லாமிய கடற்படை வீரர்கள்தான் குஞ்ஞாலி மரைக்காயர்கள்.
யார் இவர்கள்?
குஞ்ஞாலி என்றால் மலையாளத்தில் 'அன்புள்ள அலி' என்று பொருள். குஞ்ஞாலி மரைக்காயர் என்பது இந்த இஸ்லாமிய கடற்படைப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட பட்டம்தான். கி.பி. 1500 முதல் 1604 வரை போர்ச்சுகீசியர்களை கோழிக்கோடு மண்ணில் காலூன்றவிடாமல் காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 100 ஆண்டுகளில் 4 மரைக்காயர்கள் இருந்துள்ளனர். அவர்கள் முறையே,
குஞ்ஞாலி மரைக்காயர் I - குட்டி அலி மரைக்காயர்(1524-1538)
குஞ்ஞாலி மரைக்காயர் II - குட்டி அலி மரைக்காயர் மகன் (1538-1569)
குஞ்ஞாலி மரைக்காயர் III - பாத்து அலி மரைக்காயர்(1569-1595)
குஞ்ஞாலி மரைக்காயர் IV - முகமது அலி மரைக்காயர்(1595-1605)
இதில் இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர், அவரது கொரில்லா தாக்குதல் முறைக்காகவும் நேரடி காலனி நுழைவுப் போர் உத்திகளுக்காகவும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார்.
இவரது காலத்தில்தான் போர்ச்சுகீசியர்கள் மீண்டும் முறைப்படி ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம் என்று பணிந்து வந்து 1540இல் மீண்டும் சமுத்ரி அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஆனால், மீண்டும் பழைய நிலை திரும்பியதும், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுத உதவியுடன் அரசுடன் சண்டையிட்டு வென்று கேரளத்தின் சாலியம் பகுதியில் வெளிநாட்டினருக்காக கோட்டை ஒன்றை அமைத்தனர் போர்ச்சுகீசியர்கள்.
ஆயுதக் கிடங்கை அழித்த மூன்றாம் மரைக்காயர்
இப்போது அடுத்த குஞ்ஞாலி மரைக்காயருக்கான அவசியம் ஏற்பட்டது. மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் 1569ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் படை வலிமையைக் கூட்டி, சாலியம் கோட்டையைத் தாக்கி, அவர்களது ஆயுதக் கிடங்கை அழித்தார். கூடவே இன்னொரு காரியமும் செய்தார்.
அரசு அனுமதியுடன் இரிங்கல் பகுதியில் ஒரு கோட்டையை எழுப்பி, அங்கேயே கடற்படை அலுவலர்களுக்கு நிலையம் அமைத்தார். எப்போதும் எதிரியைக் கண்காணிக்கும் விதமாகவும் உத்திகள் வகுக்கும் தளாமாகவும் அதிகாரப்பூர்வ கடற்படை ராணுவக் கோட்டையை உருவாக்கினார்.
மீண்டும் வெளிநாட்டவர்களுக்கான கோட்டையை எழுப்ப போர்ச்சுகீசியர்கள் முயற்சிக்கும்போதெல்லாம் அதை முறியடித்துக் கொண்டே இருந்தார். இறுதியில் துரோகம் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்தது போர்ச்சுகீசிய தரப்பு.
நண்பனும் எதிரியாக
மரைக்காயர்களுக்கும் சமுத்ரி அரசுக்கும் இடையில், தவறான உள்நோக்கத்துடன் செய்திகளைப் பரப்பி இருவருக்குமான உறவில் விரிசல் விழ வைத்தனர். இந்த முறை போர் இன்னும் வலுவானது.
போர்ச்சுகீசிய மற்றும் சமுத்ரி படைக் கூட்டணிக்கும் மரைக்காயர் படைக்கும் இடையே போர் நடந்தது. படைக்குத் தலைமை தாங்கியது நான்காவது குஞ்ஞாலி மரைக்காயர் முகமது அலி. போரில் மரைக்காயர் தரப்பு தோல்வியைத் தழுவியது. அதனை ஒப்புக் கொண்டு கையொப்பம் இட்டபின் மீண்டும் துரோகம் இழைத்தது போர்ச்சுகீசிய தரப்பு.
முகமது அலி மரைக்காயர் ஏமாற்றி சிறைபிடிக்கப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாக்கிக் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் போர்ச்சுகீசியர்களிடம் இருந்தன. எனினும், ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கும் மேலாக போர்ச்சுகீசியர்கள் கேரளக் கடற்கரையைக் கைப்பற்றவிடாமல் காப்பாற்றியவர்கள் குஞ்ஞாலி மரைக்காயர்கள்.
மேலும், இந்தியக் கடலோரத்தில், முதன்முதலில் கடல்-போர்ப்படை அமைத்தவர்கள் என்று குஞ்ஞாலி மரைக்காயர்களைக் குறிப்பிடுகிறது இந்தியக் கடற்படை.
1971 இந்திய - பாகிஸ்தான் போரில் (வங்கதேச விடுதலைப் போர்) 'ஆப்பரேஷன் திரிசூலம்' என்று பெயரிடப்பட்ட துல்லியத் தாக்குதல் ஒன்றில் வென்ற (டிசம்பர் 4) நாளைத்தான் தேசிய கப்பல்படை நாளாக இந்தியா கொண்டாடி வருகிறது.
கப்பற்படைக்கு தனி கண்காணிப்பு அலுவலகக் கோட்டை, கடலில் துல்லியத் தாக்குதல்கள் என பல்வேறு விதங்களில் கடற்போர் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் குஞ்ஞாலி மரைக்காயர்கள்.
#kunjalimarakayar #kunjalimarakkar #kunjalikutty #kunjalimarakkar #mohanlalmovies #ramanathapuram #vedalai #kunjarvalasai #history #historyofindia