Рет қаралды 143
நலம் தரும் அம்ருத கலசம் Part:3
காமேஸ்வரி நித்யாதேவி
இந்த அம்பிகை கோடி சூரியப்ரகாசம் போன்று ஜொலிப்பவள். மாணிக்க மகுடம் தரித்தவள். தங்கத்தினாலான அட்டிகை, பதக்கங்கள், ஒளிரும் சங்கிலி, ஒட்டியாணம், மோதிரம், கால்களில் கொலுசு அணிந்தவள். ரத்னாபரணங்கள் பூண்டு, பட்டாடை உடுத்தியவள். இந்த காமேஸ்வரி நித்யா தேவிக்கு ஆறு திருக்கரங்கள். முக்கண்கள். தலையில் சந்திரகலை தரித்திருக்கிறாள்.
புன்முறுவல் பூத்த முகத்தினள். கருணையை வெள்ளமெனப் பாய்ச்சும் கண்களைக் கொண்டவள். கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மதனா, உன்மனா, தீபனா, மோகனா, ஸோஷனா எனும் ஐந்து தேவதைகளாலான புஷ்பபாணங்கள், அமிர்தத்துடன் கூடிய ரத்ன பாத்திரம், வரமுத்திரை தரித்தவள்.
ஆசைகள் அதிகமாகும் போது அது காமமாகிறது. சுகத்திற்காகவே மோகமும் அது கிடைக்காதபோது துவேஷமுமாகிறது. ஐம்புலன்கள் மூலமாக உலக விஷயங்களின் மீதுள்ள பற்று விஷய போகங்களில் சுகம் மிகுந்திருப்பதாக கருதுவதால் சுகத்திற்காக உலக விஷயங்களை நாடி அவற்றின் மீது பற்று கொள்வதை சிற்றின்பம் என்கிறோம். உண்மையில் இந்த இனிப்பான இன்பம் நீடித்ததல்ல. மிகச்சிறிய காலமே இருந்து மறைந்து விடும். இன்பமானவை இனிப்பாக இருப்பதை கரும்பு மூலம் தேவி காட்டுகிறாள்.
ஆனால், காமேஸ்வரியை சரணடைய பேரின்பம் கிட்டும். பஞ்சேந்த்ரியங்களை தன் கையிலுள்ள பஞ்சபுஷ்பபாணங்களினால் கட்டுப்படுத்துகிறாள். காமத்தால் மதம் பிடித்து தன்னையும் மற்றவர் களையும் அழிக்க முயலும்போது தன் கரத்திலுள்ள அங்குசத்தால் அடக்கி அமைதியை நிலை நாட்டுகிறாள். தன் திருவடியைப் பற்றுவோர்க்கு மரணபயத்தை நீங்கச் செய்கிறாள். பக்தர்களின் இதயக்கமலத்தில் விரும்பி வாசம் செய்யும் அம்பிகை இவள்.
காமேஸ்வரி என்றால் அழகான வடிவத்துடன் இருப்பவள். அல்லது விரும்பிய வடிவத்தை எடுக்கக்கூடியவள் என்று பொருள். கேட்கும் வரங்களை வாரி வழங்கும் பரம கருணை வடிவினள் இத்தேவி. அன்னையின் நெற்றியில் கஸ்தூரி திலகங்கள் ஜொலிக்கின்றன. வழிபடும் அன்பர்களின் மனதில் பரிவோடு நித்யவாஸம் செய்து ஆத்ம சுகத்தையும் பேரின்பத்தையும் அருள்பவள். ஆத்மானுபவத்தில் திளைப்போர்க்கு பேரொளி வடிவமாகக் காட்சி தருபவள்.
பாவிகளையும் தாய் போல் காப்பவள். அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் அருள்பவள். சௌந்தர்ய ரூபவதி. ஜீவன்களின் பாபமூட்டையைத் தன் கடைக்கண் பார்வையாலேயே சுடுபவள். மனிதர்களை வருத்தும் பாவங்களும், துன்பங்களும் இந்த தேவியை நினைத்த மாத்திரத்திலேயே மறைந்து விடும். இந்த அம்பிகையை வழி
படுவோர் புக்தி, முக்தி இரண்டையும் பெற்று பேரின்பப் பெருவாழ்வை அடைவர் என்பது திண்ணம்.
வழிபடுபலன் வாழ்வின் ஆனந்தத்திற்கும், தனவரவு, தனவிருத்திக்கும் இந்த காமேஸ்வரி தேவியின் உபாசனை பேருதவி புரியும். மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கையும் தரும். தீராத கொடிய நோய்களைப் போக்கி ஆரோக்கியமான வாழ்வை அருளும். காமேஸ்வரி காயத்ரி
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே நித்யக்லின்னாயை
தீமஹிதன்னோ நித்யா ப்ரசோதயாத்.